முலாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

 எக்காலத்திலும் உடல் நலத்திற்கு ஏற்ற உணவாக பழங்களே இருக்கின்றன. அதிலும் கடுமையாக வாட்டி வதைக்கும் கோடை காலங்களில் பழங்களை மக்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர். அப்படியான பழ வகைகளில் ஒன்றுதான் முலாம்பழம். இந்த முலாம் பழம் சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.


சிறுநீர் பாதையில் எரிச்சல் உள்ளவர்கள் இதனை உண்டால், உடனடித் தீர்வு கிடைக்கும். சித்த மருத்துவத்தில், முலாம்பழ விதைகள் தனியே எடுக்கப்பட்டு உலர்த்தி, அரைக்கப்பட்டு மருந்துப் பொருட்களுடன் சேர்த்தும் தரப்படுகிறது. காரணம், இதன் விதைகளுக்கு வயிற்றுப் புழுக்களைக் கொல்லும் சக்தி உண்டு.

சரியான உணவுப்பழக்கமின்மை, அதிகம் மருந்துகள் எடுத்துக்கொள்ளுதல் ஆகியவற்றால் பலருக்கும் வயிற்றுப்புண் எனப்படும் அல்சர் பிரச்னை உள்ளவர்கள், இந்தப் பழத்தைத் தொடர்ந்து சில நாட்கள் சாப்பிட்டுவந்தால், வயிற்றுப்புண் பூரண குணமடையும். மிகச் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுவதால், மலக்கட்டு பிரச்னையும் நீங்கும்.

முலாம் பழத்தில் வைட்டமின் சத்துகள் நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்ணில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை முலாம் பழத்தில் இருக்கும் சத்துகள் ஊக்கப்படுத்தி, வயதாவதால் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது. கண்கள் எளிதில் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது.

கோடைகாலங்களில் வெப்பம் அதிகரிப்பது, அனல் கற்று வீசுவதால் உடலில் இருகின்ற நீர் சத்துகள் வெளியேறி, உடல் சுலபத்தில் வெப்பமடைகிறது. இதனால் நமக்கு சீக்கிரத்தில் சோர்வு மற்றும் உடலில் அத்தியாவசிய உப்புகள் இழப்பு ஏற்படுகிறது. கோடைகாலங்களில் முலாம் பழங்களை துண்டுகளாக்கி, தண்ணீரில் சர்க்கரை அதிகம் சேர்த்து கரைத்து, அதில் முலாம் பழ துண்டுகளை ஊறவைத்து பருகி வந்தால் உடல் உஷ்ணம் தணியும்.


உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். கோடைகாலங்களில் உடலின் நீர் வியர்வையாக வெளியேறிவிடுவதால் ரத்தத்தில் நீர்சத்து குறைந்து ரத்த ஓட்டம் வேகம் குறைகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் முலாம் பழங்களை சாப்பிடுவதாலும் அல்லது முலாம் பழ சாறு அருந்துவதாலும் ரத்தத்தில் நீர் சத்து சேர்ந்து, ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் இது நல்ல நிவாரணி.

வயது முதிர்ச்சி அடையும் போது ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் தோல் கடின தன்மை பெறுவதோடு, தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது, ஈரப்பதம் குறைவது போன்றவை ஏற்பட்டு முதுமையான தோற்றம் பெற செய்கிறது. இளமை தோற்றத்துடன் இருக்க விரும்புபவர்கள் முலாம் பழம் அதிகம் சாப்பிடுவதால் தோலின் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி பளபளப்பை அதிகரித்து, சுருக்கங்களை போக்கி, இளமை தோற்றத்தை நீடிக்க செய்கிறது.

உடல் எடை குறைய முலாம் பழம் உதவுகிறது. முலாம் பழத்தில் நார்ச்சத்து மற்றும் கொழுப்பை கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் அதிகம் நிறைந்துள்ளன. தினந்தோறும் காலை மற்றும் மதிய வேளைகளில் முலாம் பழங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் சீக்கிரத்தில் எடை குறையும். நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் கொழுப்பு உடலில் சேராமலும் தடுக்கும்.

நமது உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் பல மாற்றங்களாலும், உடலில் சேரும் பல வகையான நச்சுக்களின் சேர்மானத்தினாலும் புற்று நோய் ஏற்படுவது அதிகரிக்கிறது. முலாம் பழங்களில் கரோட்டினாய்டு வேதிப்பொருள் அதிகமுள்ளது. எனவே முலாம் பழம் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.