கற்றாழை தலை முதல் கால் வரை வெளிப்புறம் மட்டுமல்லாது உள்ளுறுப்புகளுக்கும் நன்மை செய்யும் ஒரு தாவரம்.சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை, ரயில் கற்றாழை... என இதில் பல வகைகள் உள்ளன.
பொதுவாக அலோயின் (Aloin), அலோசோன் போன்ற வேதிப்பொருள்கள் இருக்கின்றன. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள் (Anthraquinones) ரெசின்கள் (Resins), பாலிசாச்சரைடு (Polysaccharide) போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன.
அழகுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் தயாரிக்கப் பெரிதும் பயன்படும் இவற்றின் உள்ளே இருக்கும் சதைப் பகுதியான ஜெல்லை எடுத்து, அதைத் தண்ணீரில் ஏழு முதல் பத்து தடவை நன்றாகக் கழுவி பயன்படுத்த வேண்டும்.
இந்த ஜெல், சூரிய ஒளியுடன் கலந்து வரக்கூடிய கடுமையான வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் பாதிப்பிலிருந்து சருமத்தைக் காக்கும். அத்துடன் சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்தும்.
கற்றாழை ஜூஸ் நிறைய நோய்களுக்கு நிவாரணம் தரக்கூடியது. தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸைக் குடித்துவந்தால் உடலில் உள்ள நச்சுகள் முழுமையாக வெளியேற்றப்படும். இதனால் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை வேகமாகக் குறையத் தொடங்கும். அதே வேளையில் உடல் ஆரோக்கியம் மேம்படவும் உதவும்.
குழந்தை பெற்ற பெண்களுக்கு தோள்பட்டை, தொடை, வயிறு, மார்பு போன்ற பகுதிகளில் வரிவரியாகத் தழும்புகள் ஏற்படும். இதைப் போக்க தினமும் இதன் சதையை எடுத்துத் தடவி, அரை மணி நேரம் கழித்துக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கற்றாழை சாறு உட்கொள்வதால் அல்சர் மற்றும் இதர செரிமான கோளாறுகள் தடுக்கப்படுகின்றன.
கற்றாழை ஜெல் சருமத்தில் மேற்புறம் தடவுவதால் சருமத்தில் உண்டான காயங்கள், தடிப்புகள், கட்டிகள் மற்றும் எக்சிமா போன்ற பாதிப்புகள் குணமடைகிறது.
தீக்காயம், சூரிய வெப்பத்தால் உண்டான காயம் போன்றவற்றால் உண்டாகும் புண்களைப் போக்க பல காலமாக கற்றாழை சாறு பயன்படுத்தப்படுகிறது. விரைவாக புண்ணை ஆற்றும் தன்மை கற்றாழைக்கு உண்டு.
நீரிழிவு பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் நீரிழிவிற்கு முந்தைய நிலையில் இருக்கும் நோயாளிகள் ஆகியோருக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட ஆராய்ச்சியில் கற்றாழை க்ளைகோமிக் கட்டுப்பாட்டிற்கு உதவுவதாகவும், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவதாகவும் கூறப்படுகிறது.
கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக கீல்வாதம் தொடர்பான மூட்டு வலி மற்றும் வீக்கம் ஆகியவை குறைகிறது. கீல்வாதத்துடன் தொடர்புடைய அழற்சியைத் தடுத்து , மூட்டுகளில் உண்டான காயத்தை அமைதிப்படுத்த கற்றாழை சாறு உதவுகிறது.