நோபல் பரிசு பெற்ற குலீல்மோ மார்க்கோனி


மார்க்கோனி என்ற குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை எனப்படுபவர். கம்பியற்ற தகவல்தொடர்பு முறை மற்றும் மார்க்கோனி விதி ஆகியவற்றை உருவாக்கியவர்.இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897-ல் மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர், வானொலி மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.

மார்க்கோனி 1874 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 இல் இத்தாலிய நாட்டில் பொலொனா நகரில் பிறந்தவர். தந்தை கைசப் மார்க்கோனி. தயார் ஆனி ஜேம்சன்-அயர்லாந்தைச் சேர்ந்தவர்.இவருடைய தந்தை ஓர் இத்தாலியப் பெருமகன். எனவே, மார்க்கோனி இளமையிலேயே வசதியான வாழ்க்கையைப் பெற்றார். போலக்னோ,புளோரன்ஸ், லெகார்ன் முதலிய ஊர்களில் தனிப்பட்ட முறையில் இவருடைய ஆரம்பக் கல்வி அமைந்தது.

இளமைப் பருவத்தில் இவர்க்குப் படிப்பில் ஆர்வம் மிகுதி. வீட்டிலேயே இருந்த நூல் நிலையத்தில் இருந்த அறிவியல் நூல்களைப் படித்தறிந்தார். வளர்ந்த பிறகும் இவர் பல்கலைக் கழகக் கல்வி எதனையும் பயிலவில்லை. இவருக்கு வீட்டிலேயே ஆசிரியர்கள் வந்து கல்வி கற்பித்தனர். இயற்பியலில் குறிப்பாக மின்சார இயலில் இவருக்கு அதிக நாட்டம் ஏற்பட்டது. 

மார்க்கோனி தன் இல்லத்திலும் தனியே ஆய்வுகளைச் செய்து வந்தார். 'எப்பொருளின் மூலமாக வேண்டுமானாலும் மின்காந்த அலைகள் பாயும்' என்ற கருத்தை தன் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தினார். 1894-ல் மின் அலைகள் மூலமாக சைகைகளை (சிக்னல்) அனுப்பிக் காட்டினார். வானொலி அலைகளைக் கொண்டு 'கம்பியில்லாத் தந்தி முறை'யை உருவாக்குவதில் ஈடுபட்டார். இந்த முறையை இவருக்கு முன்பே 50 ஆண்டுகளாகப் பலரும் முயற்சி செய்து வந்தாலும் அதற்கான முடிவுகள் எட்டப்படவில்லை. ஆனால் மார்க்கோனி அதற்கான 1895-ஆம் ஆண்டு ஏறத்தாழஃ ஒன்றரை கி.மீ அளவுக்குச் செய்தியை அனுப்பக்கூடிய 'திசைதிரும்பும் மின்கம்பம் ' [Directional Antenna] என்ற கருவி மூலம் தொடர்பு ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றார்.

ஆங்கில அஞ்சல் நிலையத்தின் முதன்மைப் பொறியாளர் 'வில்லியம் ஃப்ரீஸ்' என்பவர் இவருடைய ஆய்வுகளில் ஆர்வம் செலுத்தி ஊக்கம் கொடுத்தார். பல தொடர் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 1897-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மோர்ஸ் அலை வடிவை 6 கி.மீ தூர அளவுக்குச் செலுத்தும் வகையில் மின்காந்த அலை பரப்பியை (Transmitter) உருவாக்கினார். 1897-ல் மே 13 ந் தேதி நீரின் வழியாக 'நீங்கள் தயாரா?' என்ற செய்தியை சுமார் 14 கி. மீ தூரத்திற்கு செலுத்துகின்ற ஒலிபரப்பியை உருவாக்கினார்.1897-ல் 'மார்க்கோனி நிறுவனம்' இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது


இவர் பிறந்த மண்ணில் 1897-ல் ஜூலை மாதம் லாஸ்பீசியா(La Spezia) என்ற இடத்தில் தன்னுடைய ஆய்வு பற்றிய பல சோதனைகளைச் செய்து காண்பித்தார். அங்கு அரசு தனக்களித்த உதவியுடன் ஸ்டீசர் என்னுமிடத்தில் மார்க்கோனி, வானொலி நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். அவர் அங்கிருந்து செய்தி சுமார் 20.கி.மீ. அப்பால் இருந்த போர்க்கப்பல்களுக்கு எட்டியது

1900-ல் நெடுந்தூர செய்தி அனுப்பும் வானொலி நிலையத்தை உருவாக்கினார். 200 அடி உயரக் கம்பத்தை நட்டு அதில் வான்கம்பியை இணைத்தார். இயற்கை காரணமாக சூறாவளி வீசி கம்பத்தைச் சாய்தது. மார்க்கோனி உயரத்தைச் சற்று குறைத்து மற்றொரு கம்பத்தை நட்டு அட்லாண்டிக் பரப்பை தன் வானொலியால் இணைத்துக் காட்டினார். 12-12-1901-ல் 2100 மைல்களுக்கு அட்லாண்டிக்கின் குறுக்கே கடந்து செய்தியை அனுப்பிப்பெற்றார். இச்செய்தியை உலகெங்கும் அறிவித்தார். இவர் பெருமை உலகெங்கும் பரவியது. 1907 இல் அவை இன்னும் சீர்ப்படுத்தப் பட்டு அட்லாண்டிக் தொலைத்தொடர்பு வழி எல்லோரது பொதுப் புழக்கத்திற்கும் பயன்பட்டது.

மார்க்கோனியின் வானொலி ஆய்வுகள் அங்கீகரிக்கப்பட்டு, 1909-ல் கம்பியில்லாத் தந்திமுறையில் ஏற்கனவே பல ஆய்வுகள் செய்திருந்த 'கார்ல் பெர்டினாண்ட் பிரவுன்' என்ற ஜெர்மானியருடன் இணைந்து மார்க்கோனிக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.