சாதனை மனிதன் ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறு

 


நிதானிக்க நேரமில்லாமல் எதையோ துரத்தி ஓடிக்கொண்டிருக்கிற இன்றைய இந்த தலைமுறையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து, அவர்களது முன்னேற்றத்திற்கு துணைபுரிவது என்றால் அது தொழில்நுட்பங்கள் தான். உலக வரலாற்றில் 1 டிரில்லியன் சந்தை மதிப்பை பெற்ற முதல் நிறுவனம் ஆப்பிள் நிறுவனம்.

பிறந்தது முதலே பல்வேறு துன்பங்கள், சறுக்கல்கள், சர்ச்சைகள் என பலவற்றை கடந்து தொழில்நுட்ப உலகையே கட்டி ஆட்சிபுரிந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அவர் பிறந்த இரண்டாவது மாதமே அவரது வாழ்க்கையை சர்ச்சைகள் ஆட்கொள்ள தொடங்கிவிட்டன எனலாம்.  1955, பிப்ரவரி 24 ஆம் தேதி இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த அப்துல்பட்டா ஜந்தாலி- ஜோன் சிம்ப்சன் ஆகிய இருவருக்கும் பிறந்தவர்தான் ஸ்டீவ் ஜாப்ஸ்.

இவரது தந்தை சிரியாவை சேர்ந்தவர், தாய் ஜெர்மன் வம்சாவளியை சேர்ந்தவர். இவர்கள் இருவரின் காதலுக்கு ஜோன் சிம்ப்சனின் குடும்பம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். குடும்ப சூழல் காரணமாக ஸ்டீவ் ஜாப்ஸை தத்துக்கொடுக்க முடிவெடுத்தார் அவரது தாய். கணவர் அப்துல்பட்டா ஜந்தாலிக்கு தெரிவிக்காமல் அதற்கான ஏற்பாடுகளை செய்த அவர், பால்-கிளாரா தம்பதிக்கு ஜாப்ஸை தத்துக்கொடுத்தார். 2 மாத குழந்தையான ஸ்டீவ் பல்வேறு சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குக்கு பின்னர் பால் – கிளாரா தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டார். 

பால் – கிளாரா தம்பதியினர் ஸ்டீவ்வை அன்போடும் அரவணைப்போடும் வளர்த்து வந்தனர். அவருக்கு கல்வி பயிலவும் ஏற்பாடுகளை செய்தனர். ஸ்டீவ்க்கு கல்வியில் பெரிய ஈடுபாடு எதுவும் இல்லை. பள்ளியில் அத்தனை குறும்புத்தனத்தையும் வெளிப்படுத்தியதால் இவரை நல்ல மாணவர் என எவரும் கூற ஒப்புக்கொள்ள  மாட்டார்கள். அதிக பிடிவாதமும் முன்கோபமும் கொண்டவராகவே ஸ்டீவ் ஜாப்ஸ் இளம் வயதில் இருந்தார். இப்படி படிப்பில் பெரிய ஆர்வம் இல்லாதவராக இருந்தாலும் கூட மறுபுறம் தொழில்நுட்பம் அவரை வெகுவாக ஈர்த்தது. ரேடியோ மற்றும் டிவி-களின் உபகரண பாகங்களை வாங்கி ஒன்றிணைப்பதில் தீரா ஆர்வம் கொண்டிருந்தார்.

1976, ஏப்ரல் 1, தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தின் அசைக்கமுடியாத சக்தியாக மாறப்போகும் ஒரு நிறுவனத்தை, தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மிக எளிமையாக ஆரம்பித்தார் ஸ்டீவ். அதற்கு ஆப்பிள் என பெயரும் வைத்தார். அலுவலகங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த விலை உயர்ந்த கம்ப்யூட்டர்களை பொதுமக்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் கொண்டுசேர்க்க நினைத்தார் ஸ்டீவ். ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கிய 10 ஆவது நாளில், அதன் முதல் கம்ப்யூட்டரான ஆப்பிள் 1 ஐ உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தார் ஸ்டீவ். அங்கு தொடங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றிப்பயணம் 1985 ஆம் ஆண்டு வரை யாரும் நெருங்க முடியாத அளவு வேகமாக பாய்ச்சல் எடுத்தது. 

1983 ஆம் ஆண்டு பெப்சி நிறுவனத்திலிருந்த ஜான் ஸ்கல்லி என்பவரை, ஆப்பிள் நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டார் ஸ்டீவ். ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ வாக ஜான் ஸ்கல்லி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த சூழலில் 1985 ஆம் ஆண்டு ஆப்பிள் 2 தொடர்பாக ஸ்டீவ் மற்றும் ஜான் ஸ்கல்லி இடையே ஏற்பட்ட ஒரு கருத்து வேறுபாடு, ஸ்டீவை ஆப்பிள் நிறுவனத்தை விட்டு வெளியேற வைக்கும் அளவு விஸ்வரூபம் எடுத்தது. இந்த கருத்து மோதலின் விளைவாக தன்னால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து, தான் வேலைக்கு சேர்த்த ஜான் ஸ்கல்லியாலேயே வெளியேற்றப்பட்டார் ஸ்டீவ். 


வெளியே வந்த ஸ்டீவ், நெஸ்ட் என்ற நிறுவனம் ஒன்றை தொடங்கினார். நெஸ்ட் நிறுவனம் எதிர்பாராத தோல்விகளை ஸ்டீவுக்கு பரிசாக அளித்தது. ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேறி  பல சறுக்கல்களை சந்தித்திருந்த ஸ்டீவ், திரைத்துறை நோக்கி தனது பார்வையை திருப்பினார். பிக்ஸார் கிராஃபிக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தார். அந்நிறுவனத்தில் எடுக்கப்பட்ட 'டாய் ஸ்டோரி' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. துவண்டிருந்த ஸ்டீவ் மீண்டும் வெற்றியை நோக்கி ஓட ஆரம்பித்த காலம் அது. பிக்ஸார், நெஸ்ட் என துவண்டிருந்த ஸ்டீவின் சாம்ராஜ்யம் மீண்டும் ஏறுமுகத்தில் பயணித்தது. 

ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாத ஆப்பிள் நிறுவனம் மெல்ல மெல்ல சரிவை சந்திக்க ஆரம்பித்தது. இதற்கு மேலும் அமைதி காத்தால் நிறுவனம் மூழ்கிவிடும் என்பதை உணர்ந்தவர்கள் 1996 இல் ஸ்டீவ் ஜாப்ஸ் ஐ தேட ஆரம்பித்தார்கள். நெடிய பேச்சுவார்த்தைக்குப் பிறகு தனது நெஸ்ட் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனத்துடன் இணைத்தார் ஸ்டீவ். ஆப்பிள் நிறுவனம் மூழ்கிக்கொண்டிருக்கும் தருவாயில் அதனை மீட்டெடுக்க உதவி செய்தது மைக்ரோசாப்ட் தான். 

"மைக்ரோசாப்ட் நிறுவனம் ரசனையில்லாதது. மூன்றாம் தர தயாரிப்புகளை மக்களுக்கு தருபவை" இவை 1996 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் குறித்து ஸ்டீவ் கூறியவை. இரு நிறுவனங்களும் பரஸ்பரம் விமர்சித்துக்கொண்டாலும், ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் பில் கேட்ஸ் தனிமனித நாகரிகத்தை முறையாக கடைபிடிப்பவர்களாகவே இருந்தனர். தொழில் ரீதியாக பல போட்டிகளை சந்தித்தாலும், அன்றைய சூழலில் இணைந்து பணியாற்றுவதே சிறந்தது என முடிவெடுத்தன இரு நிறுவனங்களும். இதன் பலனாக திவால் நிலையில் இருந்த ஆப்பிள் மீண்டும் வளர்ச்சி பாதையில் பயணித்தது. 

கணினிகள் தயாரிப்பை கடந்து எதிர்கால தொழில்நுட்பங்கள் சார்ந்த சாதனங்களையும் தயாரிப்பது என முடிவெடுத்தது ஆப்பிள். அதன்படி வாக்மேன்களை தூக்கிக்கொண்டு மக்கள் திரிந்த காலத்தில், பாடல்களை கேட்பதற்காக சிறிய அளவிலான ஐபாட் -ஐ அறிமுகம் செய்தது. இது மிகப்பெரிய வெற்றியை அந்நிறுவனத்திற்கு தேடித் தந்தது. ஐபாட் கொடுத்த வெற்றி உற்சாகத்துடன், 2007ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் துறையில் கால்பதித்தது ஆப்பிள். "ஆடம்பரமாக செலவு செய்யும் பணக்காரர்களுக்கானது இந்த போன்கள்" என கமெண்ட் அடித்தார் பில் கேட்ஸ். அப்படி கூறப்பட்டாலும், விலையும் அதிகமாக இருந்தாலும், அதன் தரம் மக்களை கவர்ந்தது. விளைவு, ஸ்டீவ் எதிர்பார்த்தது போலவே மாபெரும் வெற்றியாக அமைந்தது ஐபோன்.

கணையம், கல்லீரல் என அனைத்தையும் பாதித்திருந்த புற்றுநோய் அவரை பலவீனப்படுத்தியது. சிறுநீரக அறுவைசிகிச்சை எல்லாம் நடந்தபின் கடைசி நாட்களை எண்ணத் துவங்கினார். தன் மகள்களுடனும், மகனுடனும், மனைவியுடனும் நேரம் செலவழித்தார்.2011, அக்டோபர் 5 அன்று உயிரிழந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். அவர் இறந்தபோது வயது 56. இன்னும் அவர் வாழ்ந்திருந்தால் ஆப்பிள் நிறுவனம் புதிய பரிமாணங்களை அடைந்திருக்கும். மக்களுக்கும் புதுவிதமான தயாரிப்பினை வழங்கி இருப்பார்.