இந்தியாவின் பண்டைய வரலாற்றில் பல தீர்க்கப்படாத மற்றும் மறைக்கப்பட்ட ரகசியங்கள் உள்ளன, அவை மனித குலத்தின் புரிதலுக்கு அப்பாற்பட்டவை, பல நூற்றாண்டுகளாக அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சித்தாலும், அவை இன்னும் தீர்க்கப்படாமலேயே இன்றும் மர்மமாக இந்த உலகத்தில் இருக்கின்றன. மகாராஷ்டிர மாநிலம் அகமத்நகரில் உள்ள ஹரிஷ்சந்திரகாட் அருகே அமைந்துள்ள கேதாரேஷ்வர் குகை அத்தகைய மர்மங்களில் ஒன்றாகும்.
இது ஹரிஷ்சந்திரகாட்டின் சின்னமாக அகமத்நகர் மாவட்டத்தில் மல்ஷேஜ் காட்டில் 4,670 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஹரிச்சந்திரகாட் கேதாரேஷ்வர் குகைக் கோவிலின் தாயகம். இந்த கோட்டை மிகவும் பிரபலமான மலையேற்ற இடமாகவும் உள்ளது.
கேதாரேஷ்வர் கோவில், மற்ற அனைத்து கோவில்களையும் விட தனித்துவமானது மற்றும் பிரசித்தி பெற்றது. கோவிலின் இருப்பிடம் ஒரு குகைக்குள் இருப்பது மட்டுமல்லாமல் அங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் நிறைந்திருக்கும். மகாராஷ்டிராவில் மட்டுமல்ல, முழு நாட்டிலும் உள்ள அசாதாரணமான மற்றும் தனித்துவமான கோவில்களில் ஒன்றாக இதுவும் திகழ்கிறது.
ஒற்றைக்கல் அமைப்பில் இருந்து செதுக்கப்பட்ட இந்த கோவிலில் ரிஷி சாங்தேவ் தேவநாகரி எழுத்துக்களில் செய்யப்பட்ட தனித்துவமான சிற்பங்கள் மற்றும் கல்வெட்டு உள்ளன. இக்கோவிலின் உள்ளேயும் கேதாரேஷ்வர் குகையிலும் உள்ள சிற்பங்கள், கோட்டை இடைக் காலத்தைச் சேர்ந்தது என்று குறிப்பிடுகிறது.
ஏழு நீர் என்று அழைக்கப்படும் சப்ததீர்த்த புஷ்கர்ணி, கோவிலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இது உண்மையில் அதன் மருத்துவத் திறன்களுக்காக பெயர்போனது. மங்கல் கங்கை என்று அழைக்கப்படும் இந்த நதி, கோவிலைச் சுற்றியுள்ள நீர்த்தேக்கங்களில் அதன் ஆதாரமாகக் கூறப்படுகிறது. இங்கு பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன, மேலும் இந்த அழகான இடத்திலிருந்து கிடைக்கும் மன அமைதி, அங்கு இருக்கும் கூழாங்கற்கள் ஆகியவை சிறப்புமிக்கதாக அனைவராலும் பாராட்டப்படுகிறது.
ஹேமத்பந்தி கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த கோவில் ஹரிஷ்சந்திரேஷ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அங்குள்ள உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, கலாச்சூரி வம்சத்தினர் இந்த கோட்டையை 6 ஆம் நூற்றாண்டில் கட்டினார்கள், ஆனால் ஹரிஷ்சந்திரகாட் கோட்டை குகைகள் 11 ஆம் நூற்றாண்டில் தோண்டப்பட்டன. கோட்டையில் உள்ள சிற்பங்களும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல கட்டமைப்புகளும், பலதரப்பட்ட கலாச்சாரங்களின் அடையாளங்களாக அமைந்துள்ளன.
குகையின் நடுவில் சுமார் ஐந்தடி உயரமுள்ள சிவலிங்கம் உள்ளது. சிவலிங்கத்தை தரிசிக்க செல்லவேண்டுமானால், ஒருவர் இடுப்பளவு ஆழமான மற்றும் குளிர்ந்த நீரில் நீந்த வேண்டும். இந்தப் பாதையின் குறுக்கே பெரிய நீரோடை இருப்பதால், மழைக்காலத்தில் இந்த குகையை யாராலும் நெருங்க முடியாது என்று உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். இன்னுமொரு சுவாரசியமான விஷயம் என்னவெனில், இந்தக் கோவிலுக்குள் தினமும் நான்கு சுவர்கள் வழியாகத் தண்ணீர் கசியும்.
லிங்கத்தைச் சுற்றியிருந்த நான்கு தூண்களில் ஒன்று மட்டுமே அதன் முழுமையான, அசல் வடிவில் உள்ளது. சத்யா, திரேதா, துவாபர மற்றும் கலியுகம் ஆகிய தூண்கள் யுகங்களின் சின்னங்களாக நம்பப்படுகின்றன. ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஒரு தூண் உடைந்துவிடும் என்று நம்பப்படுகிறது. தற்போதைய தூண் கலி யுகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கருதப்படுகிறது, இது கடைசி யுகமாகும். இதன் விளைவாக, இறுதி மற்றும் எஞ்சியிருக்கும் தூண் உடைந்தால் உலகம் அழியும் என்று ஒரு நம்பிக்கையும் இங்கு உள்ளது.
கேதாரேஷ்வர் குகையில் உள்ள மன அமைதி மற்றும் இயற்கை அனுபவத்தை பெற அந்த இடத்திற்குச் செல்லலாம். அது எந்த வகையிலும் உங்களுக்கு ஏமாற்றத்தை தராது.