மருதாணியின் மருத்துவ குணங்கள்

மருதாணி என்றதும் அவை விரல்களின் அழகுக்காக பயன்படுத்தப்பட்ட பொருள் என்றே பலரும் நினைக்கிறார்கள்.


காலங்காலமாக முன்னோர்கள் பயன்படுத்திவந்த பல பொருள்கள் குறித்தும் முழுமையான புரிதலை இன்றைய தலைமுறையினர் கொண்டிருக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்தியவை எல்லாமே ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. அவர்கள் மருந்தை தனியாக எடுத்தது இல்லை. உணவை மருந்தாக்கி சாப்பிட்டவர்கள்.

அழகு குறித்து அவர்கள் பயன்படுத்திய பொருள்களும் அப்படியே. அந்த வகையில் மருதாணி என்றாலே அவை அழகு தரும் பொருளாகவே பார்க்கிறோம். ஆனால் இவை அழகை காக்கும் பொருளாக இல்லாமல் ஆரோக்கியம் காக்கும் பொருளாகவும் பார்க்க வேண்டும். ஆயுர்வேத மருத்துவத்தில் மருதாணிக்கு தனி இடம் உண்டு. 

மருதாணி பழங்கள் சிறியவை. பட்டாணி அளவில் பல விதைகளுடன் காணப்படும். அழகுக்காகவும், அதன் மருத்துவ உபயோகங்களுக்காகவும் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன.

இராமாயணத்தில் சீதை இலங்கையில் அசோக வணத்தில் இருக்கும்போது சீதைக்கு தனது கிளைகளின் அசைவால் ஆறுதல் கூறி வந்தது. சீதை இந்த மரத்திற்கு கொடுத்த வரம்; உன்னை பூஜிப்பவர்க்கு, தண்ணீர் ஊற்றுபவர்களுக்கு உன் இலைகளை சாப்பிடுபவர்களுக்கு,கையில் பூசி கொள்பவர்க்கு துன்பம் வராது என்று.

பயன்கள்:

சுக்கிரனின் அம்சமான மருதா‌ணி இலையை வெறு‌ம் அழகு‌க்காக மட்டும் பெ‌ண்க‌ள் கைகக‌ளி‌ல் வை‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கரு‌தினா‌ல் அது ‌மிக‌‌ப்பெ‌ரிய தவறாகு‌ம். மருதாணி இலை கிருமி நாசினி.கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது.

மருதாணி இலையை நன்றாக அரைத்து சிறு சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தித் தேங்காய் எண்ணெயில் சில நாள்கள் ஊறவிட்டு, அதை நன்றாகக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும்.

மருதாணி வேர், நோய் நீக்கி உடலைத் தேற்றும்; மருதாணி பூக்களைச் சேகரித்து உலர்த்தி தலையணை போல் செய்து படுத்து வர நல்ல தூக்கம் உண்டாவதுடன், தலைப் பேன்களும் குறையும்.

மருதாணி இலைகளுடன் சிறிதளவு பாக்கு சேர்த்து அம்மியில் அரைத்து இரவில் கை, கால் நகங்களின் மீது வைத்து, காய்ந்த பின்னர் உறங்கி காலையில் கழுவ வேண்டும். இவ்வாறு 15 நாள்களுக்கு ஒரு முறை செய்து வர நகம் சொத்தையாவது அழுக்குடன் பளபளப்பு இல்லாமல் இருப்பது ஆகிய பிரச்சனைகள் தீரும். மேலும் நகம் தொடர்பாக ஏற்படும் எந்த நோயானாலும் தடுக்கப்படும்.


சிறிதளவு மருதாணிக் கொழுந்தை நீரில் இட்டு ஊற வைக்க வேண்டும். 1 மணி நேரம் ஊறிய பின்னர் இந்த நீரைக் கொதிக்க வைத்து கஷாயம் செய்து கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தால் வாய் கொப்பளிக்க வாய்ப்புண் மற்றும் தொண்டைப்புண் தீரும்.

சருமத்தில் வரும் கரும்படை, வண்ணான் படை, கால் இடுக்கிலும், கழுத்து, கை இடுக்கில், தொடையில் வரக்கூடும். மருதாணி இலையை மஞ்சள், வேப்பிலையுடன் அரைத்து அந்த இடத்தில் தடவி குளிக்க வேண்டும். 

கால் ஆணி என்பது உள்ளங்காலில் வரக்கூடியது. கால் ஆணி வந்த பிறகு உபாதை தாங்கமுடியாததாக இருக்கும். சிலருக்கு காலை எடுத்துவைக்கவும் முடியாது. இவை அதிகமாகமால் குணப்படுத்தவும் மருதாணி சிறப்பாக உதவும்.

பாதங்களில் எரிச்சல், சேற்றுப்புண், கால் நகம் சொத்தை போன்ற பிரச்சனைகளுக்கு மருதாணி இலையை அரைத்து பாதத்தில் தடவி வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.