குஜராத்தில் 1875ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் சர்தார் வல்லபாய் படேல். சிறு வயது முதலே படிப்பில் சிறந்த மாணவராக விளங்கினார். வழக்கறிஞராக வேண்டும் என்ற தாக்கத்தில் இருந்த அவர், தனது 25 வயதில் 'டிஸ்ட்ரிக்ட் பிளீடர்' படிப்பை முடித்து கோத்ராவில் வழக்கறிஞராக தொழில் செய்யத் தொடங்கினார். பின்னர் 1910ஆம் ஆண்டு லண்டன் சென்று பட்டம் படித்து முதல் மாணவராக தேர்வானார். பிறகு நாடு திரும்பிய அவர் அகமதாபாத்தில் வழக்கறிஞராக பணிபுரியத் தொடங்கினார்.
ஆனால், காந்திஜியின் உரையைக் கேட்டவர், வழக்கறிஞர் தொழிலை உதறிவிட்டு, சுதேசி இயக்கத்தில் இணைந்தார்.குஜராத்தில், வரி விலக்கு கேட்டு விவசாயிகள் போராடினர். அப்போது, காந்தி, படேல் தலைமையில், வரி கொடா போராட்டம், தீவிரமானது.முடிவில், பிரிட்டிஷ் அரசு பணிந்தது. படேலின் முதல் வெற்றி இது.
வட்டமேஜை மாநாட்டுக்குப் பிறகு காந்தி, படேல் கைது செய்யப்பட்டனர். எரவாடா மத்திய சிறையில் இருந்தபோது இருவருக்கும் நெருக்கம் வளர்ந்தது. படேலின் ஆற்றலைப் பாராட்டிய காந்திஜி, அவருக்கு, 'சர்தார்' பட்டத்தை வழங்கினார்.1931-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராகப் படேல் பொறுப்பேற்றார்.
நாடு முழுவதும் துண்டு துண்டாக மன்னராட்சி நடந்து கொண்டிருந்தது. 565 ராஜ்ஜியங்கள் ஆண்டு கொண்டிருந்தன. சிதறுண்டு கிடந்த நாட்டை ஒருங்கிணைக்கும் பொறுப்பை முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலிடம் ஒப்படைத்தார் பிரதமர் ஜவஹர்லால் நேரு. பல சர்ச்சைகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியில் நாட்டை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து "இரும்பு மனிதர்" எனப் பெயர் பெற்றார்.
இந்திய ஒருமைப்பாட்டைக் காக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் ஆற்றிய அரும்பணிகளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை.
குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். வண்ணமயமான விழாக்களுடன் இந்த சிலை திறக்கப்பட்டது.இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity)என்று அழைக்கப்படுகிறது. குஜராத்தின் நர்மதை கரையில் இது நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைதான் உலகிலேயே மிகவும் உயரமான சிலை ஆகும்.
இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட காரணத்தால், இந்தியா முழுக்க பல்வேறு பகுதிகளில் இருந்து இவரின் சிலைக்காக இரும்பு கொண்டு வரப்பட்டது. ஆம் இந்த சிலைக்கு உள்ளே இருக்கும் இரும்பு பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டது.
இதை உருவாக்க 250 இன்ஜினியர்கள், 3400 பணியாளர்கள் உழைத்து இருக்கிறார்கள். இதை உருவாக்க மொத்தமாக 40 மாதம் ஆகியுள்ளது.இதன் உயரம் 182 அடியாகும். சீனாவின் ஸ்பிரிங் டெம்பிள் புத்தரின் 177 மீட்டர் சிலை கொண்டிருந்த பெருமையை இது முறியடித்துள்ளது. அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைவிட இது இரண்டு மடங்கு உயரம் கொண்டது.இதை உருவாக்க 2389 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளது.
இந்த சிலைக்கு உள்ளே கீழ் புறத்தில் பெரிய அருங்காட்சியகம் உள்ளது. இது பட்டேலின் நினைவாக உருவாக்கப்பட்ட மியூசியம் ஆகும். இதில் 40, 000 அரிய ஆவணங்கள் உள்ளது. 2000க்கும் அதிகமான புகைப்படங்கள் உள்ளது. பட்டேலின் வாழ்க்கையை பறைசாற்றும் பொருட்களும் இருக்கிறது.