பூப்போன்ற தோற்றத்தைக் கொண்ட அன்னாசிப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைத்தாலும், இது ஒரு கோடைக்கால பழமாகும்.மேலும் இதனை பார்க்கும் போதே பலரது வாயில் இருந்து எச்சில் ஊறும். ஏனெனில் இது புளிப்பு, இனிப்பு என இரு சுவைகளும் கலந்துள்ளது.
`செந்தாழை’, `பூந்தாழப் பழம்’ என வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. `அனாஸ் சாட்டிவிஸ் ஸ்கல்ட்’ (Annas sativis schult) என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இந்தப் பழம் செதில்கள் போன்ற சொரசொரப்பான மேல் தோலையும் சாறு நிறைந்த வெளிர் மஞ்சள் நிறச் சதைப்பகுதியையும் கொண்டது.
அன்னாசியில் வைட்டமின் ஏ,பி,சி ஆகிய உயிர்ச்சத்துகள் நிறைந்துள்ளன. பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ், மினரல்ஸ் போன்ற முக்கியச் சத்துகளும் இதில் அடங்கியுள்ளன. கொழுப்புச்சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ள அன்னாசியில் புரதம் மற்றும் இரும்புச்சத்துகளும் உள்ளன.
நன்மைகள்
இன்றைக்குப் பலரையும் பாடாப்படுத்தி வரும் ஒற்றைத் தலைவலி எனப்படும் ஒருபக்க தலைவலியைக் குணப்படுத்த அன்னாசிப்பழத்துடன் தேன் சேர்த்து 40 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நிவாரணம் கிடைக்கும். கூடவே மூளைக் கோளாறு, ஞாபகசக்தி குறைவு போன்றவையும் குணமாகும்.
தொண்டைப் புண், தொண்டையில் சதை வளர்ச்சி, நல்ல குரல் வளம் பெற விரும்புவோருக்கு அன்னாசிப்பழச் சாறு பலனளிக்கும்.
அன்னாசிப்பழங்களில் புரோமைலின் எனப்படும் செரிமான நொதிகள் உள்ளன இவை புரதங்களாக செயல்படுகின்றன, அவை புரத மூலக்கூறுகளை அமினோ அமிலங்கள் மற்றும் சிறிய பெப்டைடுகள் ஆக உடைத்து செரிமானத்திற்கு உதவுகிறது. செரிமான பிரச்சனை உள்ளவர்கள் அன்னாசிப் பழத்தை சாப்பிடுவது நல்லது.
இன்றைய காலத்தில் பலருக்கு விரைவிலேயே பார்வை கோளாறு ஏற்படுகிறது. அன்னாசிப்பழத்தில் பீட்டா கரோட்டின் உள்ளது. இது கண் பார்வையை மேம்படுத்தி, மாகுலர் திசு செயலிழப்பு ஏற்படுவதைத் தடுத்து, கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், அன்னாசிப்பழத்தை உணவில் சேர்ப்பது நல்லது, அன்னாசிப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும் சோடியம் குறைவாகவும் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
அன்னாசிப்பழம் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, எனவே இதை மூட்டுவலி நோயாளிகள் சாப்பிட்டு வந்தால், மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும். மேலும் மூட்டுகள் வலிமையடையும்.
அன்னாசப்பழம் சாப்பிட்டால், ஈறுகள் வலிமையடைவதோடு, பற்களும் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
அன்னாசிப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அளவுக்கு அதிகமாக உள்ளது. இதனால் ப்ரீ ராடிக்கல்களால் சரும செல்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, அதன் மூலம் புற்றுநோய் உருவாவது தடுக்கப்படும்.
அன்னாசிப்பழம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, அதனால் இதய நோய் வருவதைத் தடுத்து, இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.