ஊட்டி-குன்னூர் சுற்றுலாத்தலங்கள்

 

உலகப் புகழ் பெற்ற கோடை வாசஸ்தலமான உதகமண்டலத்திற்கு மிக அருகில் இருக்கும் இங்கு வந்தால் நீங்கள் ஆச்சரியத்தில் மெய்மறந்து போவீர்கள்.குன்னூர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள  நகராட்சிகளில் ஒன்றாகும்.இது ஊட்டியை தலைமையகமாக கொண்ட மாவட்ட ஆட்சி தலைவரின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.பயணிகளின் ஆர்ப்பாட்டத்தால் நிறைந்து வழிந்தாலும் அமைதியாக  காணப்படும் இவ்விடம் எப்போதும்  ஆள் நடமாட்டத்துடன்  காணப்படுவதால் உறங்கா பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.


நீலகிரி மலை ரயில் பாதையில் பயணம் செல்லாமல் குன்னூருக்குச் சென்ற பயணம் நிறைவுற்றதாக கருதப்படாது. மேட்டுப்பாளையத்தில் தொடங்கி மலைப்பாதை வழியாக குன்னூர் சென்று , பின்னர் ஊட்டிக்கு செல்கிறது . செல்லும் வழியில் இயற்கை அழகும் , மலைப்பூட்டும் காட்சிகளும்  பயணிகளைக் கட்டிப்போடும் திறன் வாய்ந்தவை.

குன்னூரின் பொருளாதாரம் பெரும்பாலும் தேயிலை வர்த்தகத்தை சார்ந்து இருக்கிறது.வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் நீலகிரியின் சிறப்பு . குன்னூரும் இதற்கு விதி விலக்கல்ல. குன்னூரின் எந்தத் தெருவிலும் நீங்கள் இதைப் பெற இயலும். கண்டிப்பாக தவற விடக் கூடாத ஒன்று இந்த சாக்லேட்.


அழகிய காட்சிகள், சுற்றிப்பார்க்க பல இடங்கள், சாக்லேட்டுகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் இனிமையான காலநிலை போன்றவை குன்னூரை சுற்றுலாப் பயணிகள் மற்றும் தேனிலவுத்  தம்பதிகள் அதிகம் நாடி வரும் இடமாக செய்துள்ளது.

சிம்ஸ் பூங்கா

சிம்ஸ் பூங்கா (Sim's Park) என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மலைப்பகுதியில், குன்னூரில் உள்ள ஒரு முதன்மையான சுற்றுலா தலமாகும். இது சராசரி கடல் மட்டத்திலிருந்து 1780 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கே அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் வரை செல்கிறது. குறைந்தபட்சம் 5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை இருக்கும்.12.14 எக்டர் பரப்பில் மேடு பள்ளங்கள் உடைய நிலப்பகுதியுடனும் பல்வேறு விரும்பத்தக்க அம்சங்களுடனும் இப்பூங்கா அமைந்துள்ளது.  பூங்காவின் மற்றொரு பக்கத்தில் ரோசா தோட்டமாக பராமரிக்கப்படுகிறது. இந்தப் பூங்காவில் 85 குடும்பங்களைச் சேர்ந்த 255 பேரினத்தின் 1000 க்கும் மேற்பட்ட இனத் தாவரங்கள் பல்வேறு குழுக்களை உள்ளடக்கியதாக உள்ளது. மிக அரிதான மரங்கள் இப்பூங்காவில் காணப்படுகின்றன.ஆண்டு தோறும் மே மாதத்தின் கடைசி வாரத்தில் சிம்ஸ் பூங்காவில் பழக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இது சுமார் 4 இலட்சம் பார்வையாளர்களை கவர்ந்திடும் நிகழ்ச்சியாக திகழ்கிறது.



துரூக் கோட்டை

துரூக் கோட்டை என்பது 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சிறிய கோட்டை ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குன்னூரில் இருந்து ஏறத்தாழ 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.மக்கள் இதைப் பகாசுர மலை என்றும் அழைப்பதுண்டு.  இன்று அழிபாடாகக் காட்சியளிக்கும் இந்தக் கோட்டையின் ஒரு சுவர் மட்டுமே எஞ்சியுள்ளது. இந்தக் கோட்டை 16 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட திப்பு சுல்தானின் புறக்காவல் அரணாகப் பயன்பட்டது.சுற்றுலா செல்பவர்கள் நான்சச் தேயிலைத் தோட்டத்தினூடாக மலை ஏறுவதன் மூலம் இவ்விடத்துக்குச் செல்வர்.


டால்பின் மூக்கு

டால்பின் மூக்கு என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தின், குன்னூரில் உள்ள ஒரு காட்சி முனை ஆகும். டால்பின் மூக்கு கடல் மட்டத்தில் இருந்து 1,000 அடிக்கு மேலான உயரம் கொண்டது. குன்னூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் ‘டைகர் ஹில்’ பகுதிக்கு அண்மையில் அமைந்த அற்புதம் கலந்த பாறை மலையான இம்மலை தன் முகத்தை வெளிப்பக்கம் நீட்டி டால்பினின் மூக்கு போல் அமையப் பெற்றது தான் இதன் பெயர்க்காரணம்.இந்த டால்பின் மூக்கின் இடது மற்றும் வலது இரு பக்கத்திலும் இருந்து காணும்போது கிடைக்கின்ற காட்சிகள் மிகவிரிந்ததாக உள்ளது. இங்கிருந்து பார்க்கும்போது கேத்தரின் அருவி பல மீட்டர் உயரத்தில் இருந்து விழுவதை முழுமையாக காணலாம். தேயிலைத் தோட்டங்களையும், வளைந்த சாலைகளையும் பார்க்க ஒரு சிறந்த இடமாக இது உள்ளது.


லேம்ப் பாறை

குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் டால்பின் நோஸ் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இப்பாறைக்கு ‘லேம்ஸ் பாறை’ என்று பெயர் சூட்டிப் பெருமை கொண்டவர் அந்நாளைய ஆட்சித் தலைவர் திரு. இ.பி. தாமஸ்.இப்பாறையின் வலதுபுறம் அமைந்த உலிக்கல் ஆழ்பள்ளத்தாக்கின் அழகு, 5000 அடிக்குக்கீழ் ஆர்ப்பரித்துக் கொட்டும் குன்னூர் அருவி, கொடுஞ்சரிவான இச்செங்குத்து மலையிலிருந்து காணக்கிடைக்காத கோவை சிறப்புச் சமவெளிப் பகுதியின் சிந்தை கவர் காட்சி ஆகிய அனைத்துக் காட்சிகளும் கருத்தைக் கவரும் காட்சிகளே.


குவன்சே தேயிலை தொழிற்சாலை

குவன்சே தேயிலை தொழிற்சாலை நீலகிரி தேயிலை தயாரிப்பில் முதன்மை வகிக்கிறது.புதிதாக தயாரிக்கப் பட்ட தேயிலை வாங்கக் கிடைப்பதுடன் இங்கே தயாரித்த தேநீர் குடிக்கக் கிடைக்கிறது. காலை எட்டு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை இங்கு வேலை நேரம்.தேயிலைச் செடி வளர்ப்பிலிருந்து இறுதியாக தயாரிக்கப் படுவது வரை அனைத்தையும் இங்கு காண முடியும் என்பதால் இது கண்டிப்பாக செல்ல வேண்டிய ஒரு இடமாகும்.


ஊட்டி

ஊட்டி மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது.  இது  நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஊட்டியில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் குன்னூர்  இருக்கிறது என்றால் ஊட்டியில் இருந்து 31 கிலோமீட்டர் தொலைவில் கோத்தகிரி உள்ளது. இந்த மூன்று இடங்களுமே மலைவாசஸ்தலங்கள் ஆகும். தாவரவியல் பூங்கா,  ஏரியில் படகு சவாரி,   பல வண்ண நிறங்களில் ஏராளமான ரோஜாக்கள் அணிவகுத்து இருக்கும் பூங்கா, அருங்காட்சியகம் போன்றவை ஊட்டியில் பார்க்க வேண்டிய இடங்கள். பூத்துக் குலுங்கும் பூந்தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள் மட்டுமல்ல, யானைச் சவாரி, அருவியில் மகிழ்ச்சி பொங்க குளியல் போடுவது ஆகிய மறக்க முடியாத அனுபவங்களைப் பெறலாம்.