பீகாரில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் கொரோனா தடுப்பூசி இலவசம் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரை நடவடிக்கையில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. இந்நிலையில் பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
அதில், பீகாரில் பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கொரோனா தடுப்பூசி இலவசம்.
பீகாரில் நகர், கிராமங்களில் 2022க்குள் சுமார் 30 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும். மருத்துவம், பொறியியல் படிப்புகள் இந்தி மொழியில் கற்பிக்கப்படும். கூடுதலாக மாநிலத்தில் ஆசிரியர்களை நியமிப்பது, சுகாதாரப்பணியாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்ற பல வாக்குறுதிகள் அடங்கியுள்ளன.
முன்னதாக, காங்கிரஸ் கூட்டணி வெளியிட்டிருந்த அறிக்கையில், விவசாயக்கடன் தள்ளுபடி, வேளாண் சட்டங்கள் நிராகரிப்பு, முதியவர் பெண்களுக்கு கவுரவ ஓய்வூதியம் போன்ற முக்கிய அம்சங்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.