முகப்பருக்கள் நீங்க இதை செய்யுங்க


முகப்பருக்கள் டீன் ஏஜினரை பாடாய்ப்படுத்தும் பிரச்னை. பலவகையான கிரீம்களையும் சோப்புகளையும் பயன்படுத்தினாலும், தீர்வு என்னவோ கிடைத்தபாடில்லை. இதனால் ஏற்படும் மனஉளைச்சலும் தாழ்வுமனப்பான்மையும் கடுமையானவை. வெளியில் செல்லும்போதும், பொது நிகழ்ச்சிகள், விசேஷங்கள், திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும்போதும் போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும்போதும் முகப்பரு தரும் சங்கடம் மோசமானது. சில பருக்கள் வலி, அரிப்பை ஏற்படுத்துவதோடு, மறைந்தாலும் தழும்பை உருவாக்கி முக அழகைக் கெடுக்கின்றன. 

சருமத்துக்கு அடியில் உள்ள செபேசியஸ் சுரப்பிகள் எண்ணெய் போன்ற வழுவழுப்பான திரவத்தைச் சுரக்கும். இதை, சீபம் என்பார்கள். உடல் முழுதும் இந்த சுரப்பி இருந்தாலும், இந்தத் திரவம் முகத்தில் கன்னம், மூக்கு, நெற்றி ஆகிய பகுதிகளில்தான் அதிகமாகச் சுரக்கும். இது, சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைப்பதோடு, சருமம் வறட்சி அடையாமல் பாதுகாக்கும்; பளபளப்பான தோற்றம் தரும். மேலும், முகத்தசைகள் சுருங்கி விரியவும் இந்தச் சுரப்புகள் உதவும். பருவ வயதில் ஆண்ட்ரோஜன் (Androgen) என்ற ஹார்மோன் சுரக்கத் தொடங்கும். சிலருக்கு ஆண்ட்ரோஜன் சுரப்பு அதிகமாகும்போது, அது சீபத்தையும் அதிகமாகச் சுரக்கச்செய்கிறது. இதனால் முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகரித்து, பருக்கள் உருவாகின்றன. காற்றில் உள்ள கண்ணுக்குத் தெரியாத தூசுக்கள் பருக்களில் ஒட்டிக்கொள்ளும்போது, பாக்டீரியா தொற்று ஏற்பட்டு சீழ் பிடிக்கிறது. 

கூடுதல் எண்ணெய் சுரப்பு, தூசு, மாசு அழுக்கு போன்றவை சருமத் துளைகளை அடைத்துக்கொள்வதே பருக்கள் வர முக்கிய காரணம். எனவே அவற்றை நீக்க ஒரு நாளைக்கு 2 முறை முகம் கழுவுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

தானியங்கள், ஊட்டச் சத்துமிக்க உணவுகள், காய்கறிகள், பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும். என்ணெய் பொருட்கள், பிரெட், பீட்ஸா, பாஸ்தா, சிப்ஸ் போன்ற பொருட்களில் உள்ள சர்க்கரை அளவு பருக்கள் வர காரணம் என்பதால் தவிர்த்தல் நல்லது.

தண்ணீர் அதிகம் குடியுங்கள். கட்டாய உடற்பயிற்சியை பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். காரசார உணவுகளை தவிர்த்தல் நல்லது. இது சருமத்தில் பிஹெச் அளவை தூண்டி பருக்கள் வளர்ச்சியை அதிகரிக்கும்.

எலுமிச்சைச் சாறு, ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் மூன்று நாட்கள் இவ்வாறு செய்துவந்தால், முகப்பரு மறைந்துவிடும். 

சந்தனத்தூளைப் பன்னீரில் குழைத்து, முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். மூன்று மாதங்கள் இவ்வாறு செய்துவந்தால், பருத்தொல்லை நீங்கும். சந்தனக் கட்டையைப் பன்னீர் விட்டு அரைத்து, முகத்தில் தடவினால், பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.


ரோஜா மொட்டுக்களை எடுத்துச் சூடான நீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின், அந்த நீரை வடிகட்டி, முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறிய பின், துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு வாரத்துக்கு இரண்டு முறை செய்துவர, முகப் பருக்கள் நீங்கி, சருமம் பொலிவடையும்.

சோற்றுக்கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. காற்றாழையின் நடுப்பகுதியில் உள்ள சோற்றை எடுத்து, நீரில் நன்றாக அலசியபின், சோற்றை கூழாக்கி  முகத்தில் தடவிவர, பருவுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளைப் பூண்டை எடுத்து அதன் தோலை நீக்கி, நசுக்கி, முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் வைத்துத் தேய்க்க வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு தினமும் செய்ய, முகப்பரு மறையும்.