Toothpaste உருவான வரலாறு


நமது வாயில் ஐநூறுக்கும் மேற்பட்ட நுண்ணுயிரிகள் இருக்கின்றன. இவை பற்களிடையே ஒட்டியிருக்கும் மீதமுள்ள உணவுத் துகள்களை அமிலத்தன்மை கொண்டதாக்குகிறது. இந்த அமிலம் பல்லின் எனாமலை சிதைத்து பல்லைப் பலவீனமாக்குகிறது. இந்தச் சிதைவுகளைத் தவிர்க்கவும், வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கவும் பல் தேய்த்தல் முக்கியமான நிகழ்வாகிவிட்டிருக்கிறது.

பற்பசை என்பது பற்களையும் வாயையும் துப்புரவாகவும் தூய்மையாகவும் வைத்திருக்கப் பயன்படும் பசையாகும். பற்தூரிகை கொண்டு இது பயன்படுத்தப்படுகிறது. முன்னேறிய நாடுகளில் பெரும்பாலான மக்கள் நாள்தோறும் பற்பசை பயன்படுத்துகிறார்கள். பற்பசை பயன்படுத்தாமல் இயற்கை முறைகளைப் பயன்படுத்தியும் பல் துலக்கலாம்.பொதுவாக பற்துலக்கியால் தேய்க்கும் போதே பெரும்பாலும் பல் சுத்தம் செய்யப்படுகிறது. வெறும் பற்பசையால் மட்டும் சுத்தம் செய்யப்படுவதில்லை. பற்பசையை விழுங்குதல் கூடாது. ஆனாலும் சிறிதளவு பற்பசையை விழுங்குவதனால் பெரும் தீங்கு ஏதும் ஏற்படுவதில்லை.

கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி பகுதியில் வாழ்ந்த இந்திய மக்களிடம் தான் உலகில் முதன் முதலில் பல் துலக்கும் பழக்கம் இருந்ததாக அறியப்படுகிறது. முதலில் குருமணலை பல் துலக்குவதற்காக பயன்படுத்திய இவர்கள் பிறகு எரிந்த மரங்களின் சாம்பலை விரலால் தொட்டு பல் துலக்கும் அளவிற்கு சிந்து சமவெளி மக்கள் நாகரீகத்தில் வளர்ச்சியடைந்திருந்தனர். கெளதம புத்தர் காலத்தில் வேப்பமரக் குச்சிகளை பல் துலக்கப் பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.இந்தியர்கள் கருவேலங்குச்சி, ஆலங்குச்சி, வேப்பமரத்துக் குச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தி பற்களை சுத்தம் செய்துள்ளனர். 


சில நூற்றாண்டுகள் வரை சாம்பலை பயன்படுத்திய எகிப்தியர்கள், அன்றாடம் பல் துலக்குவதற்கு சாம்பல் உகந்தது அல்ல என்பதை அறிந்து பல்துலக்க தனியாகப் பொடி தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார்கள். பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, உப்பு, புதினா இலை, ஐரிஸ் மலர், மிளகு ஆகியவற்றுடன் இருபது வகையான தானியங்களைச் சேர்த்து பொடியாக்கி கி.பி நான்காம் நூற்றாண்டில் உலகின் முதல் பற்பொடியை தயாரிப்பதில் எகிப்தியர்கள் வெற்றியடைந்திருந்தனர். 

கி.பி.18 ஆம் நூற்றாண்டு வரை இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாட்டு மக்களிடையே பல்துலக்கும் பழக்கம் நடைமுறையில் இல்லை.ஆரம்பத்தில் சாம்பலை பயன்படுத்திய இவர்கள் நாளடைவில் உப்பு, படிகாரம், லவங்கப்பட்டை ஆகியவற்றை சேர்த்து அரைத்த பொடியைக் கொண்டு பல் துலக்க ஆரம்பித்தனர்.  1850 ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் ஹாரிஸ் (Dr. John Harris) என்ற மற்றுமொறு பல் மருத்துவரால் மேற்சொன்ன மூலப்பொருட்களுடன் சுண்ணாம்பையும் சேர்க்கப் பரிந்துரை செய்யப்பட்டது.

நியூயார்க் நகரில் 1806 ஆம் ஆண்டு வில்லியம் கோல்கேட்  என்பவரால் துவங்கப்பட்டு பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வந்த கோல்கேட் & கம்பெனி, பற்பொடியின் முக்கியத்துவத்தை பற்றி அறிந்து பல்வேறு வகையான பற்பொடி தயாரிப்பு முறைகளை ஆய்வு செய்து இறுதியில் உப்பு, படிகாரம், சுண்ணாம்பு ஆகியவற்றை கொண்டு வணிகரீதியான உலகின் முதல் பற்பொடியை 1873 ஆம் ஆண்டு தயாரித்து ‘கோல்கேட் பற்பொடி’ என்ற பெயரில் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தது. அதுவரையிலும் குடிசை தொழிலாக இருந்துவந்த பற்பொடி தயாரிக்கும் தொழில், அதன்பிறகு வணிகத்துவம் பெற ஆரம்பித்தது. இக்காலகட்டங்களில் தான் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மக்களிடையே தவறாமல் அன்றாடம் பல்துலக்கும் பழக்கம் ஆரம்பித்தது என்று சொல்லலாம்.


பற்பசை உற்பத்தி சூடுபிடிக்க ஆரம்பித்த சமயத்தில் திடீர் திருப்பமாக 1937 ஆம் ஆண்டு, புளோரைடு பற்பசைகள் பற்களுக்கு உகந்தது அல்ல என்று அமெரிக்க பல் சங்கம்  தடை செய்ய முன்வந்தது. அதாவது பெரியவர்கள் உபயோகிக்கும் பற்பசையில் புளோரைடின் அளவு 1000ppm-க்கு (PPM – Parts Per Million), மிகாமலும் சிறியவர்கள் உபயோகிக்கும் பற்பசையில் புளோரைடின் அளவு 500ppm – க்கும் மிகாமலும் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்தது.[6] இதன் பிறகு தான் பற்பசை உற்பத்தி அதிகரித்து புதிய பரிணாமத்தை அடைய துவங்கியது.

இன்றைய நவீன பற்பசை தயாரிப்பில் மூன்றே மூன்று புளோரைடுகள் தான் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சோடியம் புளோரைடு , ஸ்டன்னஸ் புளோரைடு , சோடியம் மோனோபுளோரோபாஸ்பேட் ஆகியனவாகும்.பிரஷ் முழுவதும் பற்பசையை வைத்துத் தேய்க்க வேண்டிய அவசியமில்லை. ஒரு பட்டாணி அளவு வைத்தாலே போதுமானது.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கரியால் பல் துலக்கி வந்ததை ஆரோக்கியம் குறைவு என்று பற்பொடிகளும் பற்பசைகளும் வந்தன. இன்று கரியும் உப்பும் நல்லது என்று பற்பசைகளில் சேர்த்துவிட்டனர்.