சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டை பயன்படுத்தலாமே

அன்றாடம் நாம் காலையில் கண் விழிக்கும் கணம் முதல் இரவு கண்ணுறங்கும் வரை (உண்ணும்/அருந்தும்) காபி, டீ அல்லது ஜூஸ், பிஸ்கட், சாக்லேட் மற்றும் தின்பண்டங்கள் என இனிப்பு சார்ந்த எல்லாவகை உணவுப்பண்டங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது சர்க்கரையே. இன்றைக்கு பெருவாரியான மக்கள் பல்வேறு நோய்களின் பிடியில் சிக்கித் தவித்து வருவதற்குக் காரணம் இந்தச் சர்க்கரையே. ஆகவே சர்க்கரைக்கு மாற்றாக பனங்கற்கண்டைப் பயன்படுத்துவோம்.


தென்னை மரங்களில் இருந்து உணவிற்கு பயன்படும் தேங்காய் மற்றும் இன்னும் பிற உபயோகத்திற்காக பொருட்கள் கிடைப்பது போலவே, பல உபயோகமான பொருட்களை தரும் ஒரு மரமாக பனை மரம் இருக்கிறது. பனை மரத்தில் இருந்து மனிதர்கள் சாப்பிடுவதற்கு பனங்கிழங்கு, நுங்கு, கள் போன்றவை கிடைக்கின்றன. “பனங்கற்கண்டு” என்பது பனைவெல்லத்திலிருந்து செய்யப்படும் இனிப்பு பொருளாகும்.இது மிஸ்ரி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ராக் கேண்டி என்பர்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மிகுந்த இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆனால் பனங்கற்கண்டில் குறைந்த அளவு இனிப்பு சுவை இருப்பதால் நமது உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது. நமக்கு ஏற்படும் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு இதை வீட்டில் பயன்படுத்துவர்.இதில் கால்சியம், இரும்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மொத்தம் 24 வகையான இயற்கைச் சத்துகள் நிறைந்துள்ளதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதொரு வரப்பிரசாதமே. ஆனாலும் அதை அளவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டில் கலோரிகள் - 54, புரதம் - 0 கிராம், கொழுப்பு - 0 கிராம், கார்போஹைட்ரேட்டுகள் - 15 கிராம், நார்ச்சத்து - 0 கிராம், பனை சர்க்கரை - 15 கிராம் உள்ளது.

நன்மைகள்:

பனை மரத்திலிருந்து கிடைக்கும் உணவு பொருட்கள் குளிர்ச்சி தன்மை வாய்ந்தது என்றாலும் குளிர்காலங்களில் ஏற்படும் ஜலதோஷத்தால் தொண்டைக் கரகரப்பு, நெஞ்சுசளி, இருமல் ஆகியவற்றை போக்குவதில் பெரும்பங்காற்றுகிறது சிறிதளவு பனங்கற்கண்டை வெறும் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் மேற்கூறிய பிரச்சனைகள் சீக்கிரம் தீரும்.


அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள் மற்றும் சாப்பிட்டவுடன் வாயை தண்ணீர் கொண்டு கொப்பளிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு வாய் துர்நாற்ற பிரச்சனை ஏற்படுவது சகஜம். உங்கள் வாய் துர்நாற்றம் நீங்க கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் வாய் துர்நாற்றம் முற்றிலும் நீங்கும்.

சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் கண்பார்வை அதிகரிக்கும்.

கர்ப்பிணிகள் சிறுநீர் பிரியாமல் மிகவும் அவதிப்படுவார்கள். அத்தகைய சூழலில் வெந்நீருடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கக் கொடுத்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். 

பனங்கற்கண்டில் உள்ள கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி ஈறுகளில் உள்ள ரத்தக்கசிவை தடுக்கும். மேலும், பற்களின் பழுப்பு நிறத்தைப் போக்கக்கூடியது. 

பனங்கற்கண்டு இதில் சர்க்கரை மற்றும் தேனை காட்டிலும் குறைவான குளுக்கோஸ் அளவு உள்ளது. இதன் கிளைசெமிக் குறியீடும் குறைவாக உள்ளது. மற்ற இனிப்புகளை காட்டிலும் இரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.


பனங்கற்கண்டில் காய்கறிகள் மற்றும் வாழைப்பழங்களை காட்டிலும் அதிக பொட்டாசியம் உள்ளது. இது தசை சுருக்கம் மற்றும் இதயத்துடிப்பு போன்ற நரம்பு மண்டல செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது. உடலுக்கு போதுமான அளவு பொட்டாசியம் எடுத்துகொள்வது உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும்.

பனங்கற்கண்டில் உள்ள சர்க்கரை உள்ளடக்கம் சீரானது. இது வைட்டமின் பி1, பி2, பி3,பி 6 மற்றும் பி 12 ஆகியவற்றின் நல்ல மூலத்தை கொண்டுள்ளது. இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கவும் பெண்களுக்கு உண்டாகும் பிசிஓஎஸ் பிரச்சனையை குணப்படுத்தவும் செய்கிறது.

எத்தகைய ஒரு நோயையும் எதிர்த்து நின்று, உடல்நலனை பாதுகாப்பதில் உடலின் ரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன்களை பெறலாம்.