மொஹரம் திருநாள் இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். சில காரணங்களுக்காக கொண்டாடவும், சிலர் துக்க தினமாகவும் கொண்டாடுகின்றனர். இஸ்லாமிய மாதங்களில் ரமலானுக்கு அடுத்து பலரும் அறிந்த ஒரு மாதம் மொஹரம் . இதுதான் ஹிஜ்ரா நாள்காட்டியின் முதல் மாதமும் கூட. இஸ்லாமிய நாட்காட்டி சந்திர நாட்காட்டியுடன் அடிப்படையில் உள்ளதால், கிரிகொரியன் நாட்காட்டியுடன் ஒப்பிடும் போது, ஒவ்வொரு ஆண்டும் நகர்வது போன்று காட்சி அளிக்கின்றது.
இந்த புனித மாதத்தில் சண்டைகள், புனிதப் போர் புரிவதாற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நாளில் நோன்பு இருப்பதால் வாழ்வு வளமையாகும். மொஹரம் மாதத்தின் 10ம் நாள் (அரபு மொழியில் ஆசூரா) தியாகத் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இம்மாதத்தின் பிறை 9, 10 ஆகிய தினங்களில் நோன்பு வைப்பார்கள் முஸ்லிம்கள். இந்த 10 வது நாளைத்தான் `ஆஷூரா’ என்று இஸ்லாமிய வரலாறு அழைக்கிறது. ஆஷூரா எனும் அரபுச்சொல்லுக்கு `பத்தாவது நாள்’ என்றுதான் பொருள்.
முதன் முதலில் இந்நாளில் நோன்பு வைப்பதை வழக்கமாக ஆக்கியவர்கள் யூதர்கள்தாம். அதாவது, இயேசு பிறப்புக்கும் முந்திய காலத்திலேயே ஆஷூரா நோன்பு தொடங்கிவிட்டது. யூதர்களின் சரித்திரத்தை அறிந்தவர்களுக்குத் தெரியும், அவர்கள் நபி மூஸா எனும் மோசஸ் அவர்களை இறைத்தூதராக ஏற்று தனி மதத்தை அமைத்துக்கொண்டவர்கள்.
நபி மூஸா (அலை) அவர்களும் அவருடைய இனத்தாரும் எகிப்தில் ஃபிர்அவ்ன் (பாரோன்) எனும் கொடுங்கோல் மன்னனின் தேசத்தை விட்டுத் தப்பித்து வெளியேறியதை நாம் அறிவோம். யூதர்கள் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து கீழ்ப்படியாமை மூலம் தங்கள் நபி மூஸாவை வருத்தினாலும், அவரைக்கொண்டுதான் தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்பதை உணர்ந்திருந்தார்கள். மூஸா ஓர் இறைத்தூதர் என்பதால் அவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டு, ஃபிர்அவ்னின் கொடுமையிலிருந்து தாங்கள் தப்பித்துவிட முடியும் என்று நம்பினார்கள். அதே சமயம், அவரிடம் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு தொல்லை கொடுப்பதும், குதர்க்கமாகத் தங்கள் சொந்த புத்திக்குப் பட்டதையெல்லாம் பேசி அவரின் கட்டளைகளை உதாசினப்படுத்துவதும், அவர் இல்லாத சமயத்தில் காளைக்கன்று சிலை ஒன்றை வழிபாடு செய்து இறைவழிபாட்டில் இணைவைப்பதுமாக எத்தனை வழிகளில் ஓர் இறைத்தூதரை இம்சிக்க முடியுமோ அனைத்தையும் செய்தார்கள்.

ஆனால், வரலாறு நெடுக தங்களை நபி மூஸாவின் ஆன்மிக வாரிசுகளாகவும் தவ்றாத் (தோரா) வேதத்தின் ஏகபோக உரிமையாளர்களாகவும் முன்னிறுத்துவதில் வாய்ப்பேச்சு வீரர்களாக விளங்கினார்கள். இந்த நிலைமை ஆயிரக்கணக்கான இறைத்தூதர்கள் அவர்களின் இனத்தில் அனுப்பப்பட்டபோதும் தொடர்ந்தது. பல இறைத்தூதர்களைக் கொலை செய்தார்கள். நபி ஈஸா (இயேசு) வந்தார். அவரையும் கொல்வதற்குச் சதி செய்தார்கள். அவர் தங்களின் இனத்தைச் சேர்ந்தவரே என்றாலும் தங்களின் மத மோசடிகளுக்கு எதிராய் களப்பணி செய்கிறார் என்று அறிந்தவுடன் அவரையும் விட்டுவைக்கக் கூடாது எனும் முடிவுக்கு வருகிறார்கள். இறைவன் அவரைக் காத்தான். சிலுவை மரணத்தில் சிக்காதபடி உயிரும் உடலுமாக அற்புதமான முறையில் அவரை வானுலகு உயர்த்தினான் என்கிறது திருக்குர்ஆன்.
இறைத்தூதர்களுக்கும் இறைவேதங்களுக்கும் எதிராய் இவ்வளவு அழிச்சாட்டியம் செய்திருந்த நிலையில்தான் நபிகளார் இந்த யூதர்களை மதீனா மாநகரில் எதிர்கொள்கிறார்கள். அதற்கு முன்பு வரை யூதர்களுக்கு மத்தியில் வாழ்கின்ற நிலை நபிகளாருக்கு வாய்த்ததில்லை. மக்காவில் பிறந்து அதையே வாழ்விடமாகக்கொண்டு வயது 53-ஐ எட்டிவிட்டார் அவர். தமது சொந்த ஊர் மக்கள் தம்முடைய ஏகத்துவப் பிரசாரத்தை எதிர்த்து தம்மைக் கொலை செய்யவும் துணிந்த பிறகே மதீனா வந்தார்கள் நபிகளார். இங்குதான் யூதர்களுடனான உரையாடல் தொடங்குகிறது.
தங்களின் இனத்தில் இல்லாமல் அரபுக்கோத்திரமான குறைஷ் மக்களிலிருந்து ஒருவர் இறைத்தூதராக வந்திருப்பதை ஒருக்காலும் சீரணிக்க முடியாமல் அவரை எதிர்த்துச் சதி செய்வதையே இலட்சியமாகக்கொண்டு இயங்கினார்கள் யூதர்கள். ஆனால், தங்கள் இனத்திலிருந்து வந்த இறைத்தூதர்களிடமும் இப்படித்தான் அவர்கள் நடந்தார்கள் என்பதை வரலாறு முழுக்கப் பார்க்கிறோம்தானே?
இப்படியான ஒரு காலகட்டத்தில் மதீனாவில் நபிகளாரும் முஸ்லிம்களும் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாள் ஆஷூரா நோன்பிருந்த சமயத்தில்தான் அவர்களுக்கு ஒரு சங்கதி தெரிய வந்தது. யூதர்களும் நோன்பு வைக்கிறார்கள் என்று. நபிகளார் கேட்டார்கள், `உங்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று?’ நபி மூஸாவின் பெயரில் பெருமையடிப்பதற்குக் கொஞ்சம் சளைக்காத யூதர்கள் சொன்னார்கள், ‘இது ஒரு மகத்தான நாள்; இந்த நாளில்தான் மூசாவையும் அவருடைய சமுதாயத்தையும் அல்லாஹ் காப்பாற்றி, ஃபிர்அவ்னையும் அவனுடைய சமுதாயத்தையும் கடலில் மூழ்கடித்தான். எனவே, மூசா அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நோன்பு நோற்றார்கள். ஆகவே, நாங்களும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்.’
இந்தப் பதிலைக் கேட்ட நபிகளார், ‘உங்களைவிட நாங்களே மூசா அவர்களின் மீது மிகவும் உரிமையுள்ளவர்கள், நெருக்கமானவர்கள்’
இருப்பினும், தங்கள் இறைத்தூதரை இம்சித்து நன்றிகெட்ட நிலையில் வெற்றுச் சடங்காக நோன்பை வைத்து திருப்தியடைந்துகொள்கிற யூதர்களைப் பார்த்தபோது, அவர்களைவிட பல மடங்கு உண்மையான விசுவாசத்துடன் நபி மூஸாவை நேசித்து மரியாதை செய்கின்ற தாமும் முஸ்லிம்களுமே இந்நோன்பை அதிக விருப்பத்துடன் அனுசரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்கள் நபிகளார். அதே சமயம், அவர்களுக்கு ஒப்பாக தம்முடைய வழிபாட்டை ஆக்கிக்கொள்வதில் உடன்பாடு அற்றவர்களாகவும் இருந்தார்கள். எனவே, முஸ்லிம்களுக்கு இரண்டு நாள் நோன்பை வழிமுறை ஆக்கினார்கள். ஆஷூரா என்றால் பத்தாவது நாளைத்தான் குறிக்கும் என்றாலும், `இனி ஒன்பதிலும் நான் நோன்பு நோற்பேன்’ என்றார்கள். இன்று முஸ்லிம்கள் ஆஷூரா நோன்பை இரண்டு நாள்களாக அனுசரிக்க இதுவே காரணம். இதன் மூலம் நபி மூஸாவின் வெற்றியை நினைவுகூர்ந்து ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதுடன், நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி யூதர்களுக்கு மாற்றமாகவும் நடந்து தனித்துவத்தையும் நிலைநாட்டுகிறார்கள்.

சுமார் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆஷூரா நாளில் நபிகள் நாயகத்தின் பேரன் இமாம் உசேன் மற்றும் அவரின் சிறிய மகனும் கர்பலா போரில் கொல்லப்பட்டனர். இமாம் உசேன் கொல்லப்பட்டதையொட்டி கருணை மற்றும் நீதியை பற்றிய செய்தியாக அவரைப் பின்பற்றுபவர்களிடையே கடைபிடிக்கப்படுகிறது. முஹர்ரம் என்ற சொல்லுக்கு தடை செய்யப்பட்ட மற்றும் பாவத்திற்குரிய ஒன்று என்று பொருள். இந்த மாதத்தில் 10 நாட்கள் நோன்பு இருக்கிறார்கள். மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெறும். எல்லா முஸ்லீம் குழுக்களும் இந்த நாளை ஒரே மாதிரியாக கடைப்பிடிப்பதில்லை. ஷியா முஸ்லிம்கள் இந்த நாளில் துக்க நாளாக அனுசரிக்கிறார்கள். அது ஆஷூரா என்று அழைக்கப்படுகிறது. கி.பி 680இல் கர்பலா போரில் மாதத்தில் பத்தாம் நாளில் நபிகள் நாயகத்தின் பேரனும் ஷியா சமூகத்தின் மூன்றாம் இமாமுமான இமாம் உசேன் அலி கொல்லப்பட்டதாக நம்புகிறார்கள்.
ஆஷூரா நாளில் இமாம் உசேன் அலி ஷியா முஸ்லீம் சமூகம் துக்கம் அனுசரிக்கிறது. இமாம் உசேன் அலி தலை துண்டிக்கப்படுவதற்கு சற்று முன்பு அனுபவித்த துன்பங்களை இது எடுத்துக்காட்டுகிறது. முஹர்ரம் ஷியா முஸ்லீம்களுக்கு வருத்தமும் துக்கமும் நிறைந்த காலம் மசூதியில் துக்கரமான கவிதை பாராயாணங்கள் பாடப்படுகின்றன.
சிலர் இந்த தியாகத் திருநாளில் ஆசுரா என்று கத்தியால் தங்களைத் தாங்களே அடித்துக் காயப்படுத்திக் கொண்டு இந்த தியாகத்திருநாள் தினத்தை கடைப்பிடிக்கின்றனர்.