உலக மகளிர் தினம் : பாரதி கண்ட புதுமைப் பெண்களை போற்றுவோம்

 பெண்மையை போற்றுவோம். மாதராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்ற கூற்றிற்கு ஏற்ப பெண்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதியை உலகில் உள்ள அனைத்து பெண்களும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த தினம் ஒரு மாபெரும் போராட்டத்திற்கான வெற்றி என்பது உங்களில் எத்தனைப்பேருக்கு தெரியும்?

1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதிநித்துவம் ஆகிய முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போராட்டத்தை கையில் எடுத்தனர்.

ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தினர். பாரிஸ் நகரத் தெருக்களில் பெண்கள் பலரும் அணிகளாகத் திரண்டனர்.

கோவத்தில் கொதித்தெழுந்த பெண்களை அதிகாரம் கொண்டு அடக்கி, போராட்டத்தில் ஈடுபடும் ஒவ்வொருவரையும் கைது செய்வேன் என்று அறிவிப்பு விடுத்தார் அந்நாட்டு அரசர். ஆயிரக்கணக்கில் கூடிய பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் வீதிகளில் திரண்டு வரத் தொடங்கினர். பெண்களுடன் கைக் கோர்த்து அவர்களின் கோரிக்கைகளுக்காக கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை கைது செய்வேன் என்று மிரட்டிய இரண்டு காப்பாளர்களை கொந்தளிப்பில் தாக்கியே கொன்றனர் போராட்டக்காரர்கள். இந்த நிகழ்வால் அதிர்ந்துப்போன அரசர், பெண்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கிறேன் என்றார். பின்னர் அது இயலாது போனதால், அரசர் முடித்துறந்தார்.

காட்டுத்தீப் போல இந்த செய்தி ஐரோப்பிய நாடுகளுக்கு பரவியது. பிரான்ஸ் நாட்டு புரட்சி பெண்களுக்கு முன்னோட்டமாக அமைந்தது. அந்நாட்டுப் பெண்களும் தங்களின் உரிமைகளுக்காக போராட்டத்தில் குதித்தனர். கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், ஆளும் வர்க்கம் சற்று நடுங்கியது.

இந்த சமயத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட இத்தாலி நாட்டுப் பெண்கள், தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் அளித்தார்.  அந்த நாள் தான் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும்.

உலகப் பெண்களின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்த அந்த நாளே, மகளிர் தினமாக அமைய அடிப்படை காரணமாக இருந்தது. பின்னர்,  ஒரு மாநாட்டில் ஜெர்மனியின் சோசலிச ஜனநாயக கட்சியின் மகளிர் அணித்தலைவியான க்ளாரா ஜெட்கின், போராட்டம் வெற்றிப்பெற்ற நாளான மார்ச் 8ம் தேதியை சர்வதேச மகளிர் தினம் கொண்டாட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார்.

17 நாடுகளிலிருந்து அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அந்தத் திட்டத்தை வரவேற்றனர். பின்னர் ஏற்பட்ட பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் 1975 ஆம் ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

பெண்கள் கையில் எடுத்த ஒரு மாபெரும் போராட்டத்தின் இறுதியாக கிடைத்த வெற்றியையே உலக மகளிர் தினமாக மார்ச் 8ம் தேதி கொண்டாடுகிறோம்.

பாரதி கண்ட புதுமைப் பெண்களாக உலா வரும் நிலையில் பாலின சமத்துவம் என்பது அடிப்படை உரிமை மட்டும் கிடையாது. அது சமூகநீதி என்பதை பல பெண்கள் இன்று மெய்பித்து காட்டியுள்ளனர். ஆண்களை விட பெண்களே அதிக அளவு மன உறுதி கொண்டவர்கள்.அதனால் தான் ஒரு கருவை 10 மாதம் சுமந்து பெற்றெடுக்கும் பாக்கியம் பெண்களுக்கு கிடைத்துள்ளது.


பெண்களை விட ஆண்களுக்கு வலிமையை கொடுத்ததே அவர்கள் ஆபத்திலிருக்கும் போது உதவுவதற்குத்தான். ஆனால் அதை தவறாக பயன்படுத்தும் ஆண்களுக்கு மத்தியில் போராட்டமே வாழ்க்கையாகி ஒவ்வொரு நொடியும் பல்வேறு இன்னல்களை தாண்டி தடைகற்களை படிக்கற்களாய் மாற்றும் பெண்களை போற்றுவோம். இனி வரும் ஆண்டுகளில் பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்கள் குறையும் என நம்புவோமாக

பெண்களின் நிலையானது பல்வேறு முரண்பாடுகள் நிறைந்தது என்றே சொல்ல வேண்டும். ஒருபுறம் பெண் சிசுக்கொலை நடந்து கொண்டிருக்கும். இன்னொரு புறத்தில் ஏதோ ஒரு நாட்டில் பெண்கள் வெற்றிக்கனி பறித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண் பிரதமர், ஒரு பெண் ஜனாதிபதி, ஒரு பெண் சபாநாயகர், பல பெண் முதலமைச்சர்கள், பெண் விளையாட்டு வீரர்கள், விண்வெளி வீராங்கனைகள் என்று உலகம் பெருமைப்பட சொல்லிக் கொண்டாலும் பெண்களின் நிலை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பசுமையானதாக இல்லை. பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள் பலர் சமுதாயத்தின் தீ நாக்குகளுக்குப் பயந்து கொண்டு தங்கள் துயரங்களை, அவமானங்களை வெளியில் சொல்லாமல் மறைத்து வைத்து மன அமைதியை தொலைத்துவிட்டு வாழ்ந்து வருகிறார்கள். ஆளும் நாற்காலியில் அமர்ந்திருப்பவர்களும், நீதி மன்றங்களும் வாய்மூடி மௌனம் காப்பார்கள். இந்த நிலைமை தற்போது சற்று மெல்ல மெல்ல கடந்து வெளி உலகிற்கு தங்களை அடையாளம் காட்டி வருகின்றனர்.

பெண்ணுரிமைக்காக போராடிய போராளிகளைப் பற்றியும் பெண்கள் போர்க்குணத்துடன் கட்டியமைத்த இயக்கங்கள் பற்றியும் இந்நாளில் நன்றியுடன் நினைத்து சிறப்புச் செய்ய வேண்டும். கடந்த கால வரலாற்றை அதில் நடந்த தவறுகளை திறந்த மனதோடு இருபாலரும் கற்று ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். அன்பிற்கு அடையாளமாகவும், தெய்வங்களாகவும், தெய்வத் தன்மை சூட்டப்பட்டாலும் பெண் சமூகத்தை மிகவும் கீழான நிலையிலேயே சமூகம் வைத்திருக்கிறது என்பது வலராற்று உண்மை.


கல்வி வாய்ப்புகளும், வேலை வாய்ப்புகளும் ஏற்படுதிய பொருளாதாரச் சுதந்திரமும் பெண்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்களுக்கெதிரான கொடுமைகளை கண்டு அயர்ந்து போகாமல் எதிர்த்து நின்று பிரகாசிப்போம்’ என்பதுதான் இந்த ஆண்டு மகளிர் தினத்தில் பெண்கள் இந்த உலகத்திற்கு தெரிவிக்கும் செய்தி.


பெண்ணே நீ உனக்கென வாழ்வது எப்போது...

உண்மையான மாற்றம் வரும் அப்போது.