மதுரை வரலாறு
இந்திய துணைக்கண்டத்தில், தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை நகரம், சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று[3]. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை, தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. சங்க காலம் எனக் குறிக்கப்படும் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில், தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு, தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை.
2500 ஆண்டுகள் பழமையான மதுரை முந்தைய காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் கடம்ப வனம் என்றும் மருத மரங்கள் அதிக அளவில் இருந்ததால் மருதை என்றும் அழைக்கப்பட்டதாகவும், பின் காலப்போக்கில் மருதை மதுரையாக திரிந்ததாகவும் கூறுகின்றனர். அனைவரும் இங்கு கூடி இலக்கியப் பூர்வமான கலந்துரையாடல் செய்ததால் இதற்கு கூடல் நகர் என்ற பெயரும் உருவானதாக கூறப்படுகிறது. கோட்டையின் நான்கு வாயில்களிலும் நதிகள் சங்கமிப்பதால் நான்மாடக்கூடல் என்ற பழமையான பெருமை மிகுந்த பெயரும் உண்டு. நீர் நிலைகளுக்கு நடுவே அமைந்த ஊர் என்பதால் இதற்கு ஆலவாய் என்ற ஒரு பெயரும் உண்டு. இந்த ஆலவாய் எனும் பெயர் வர புராண கதையும் உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த ரசனை மிகுந்த கதை இதோ. முப்பெரும் தமிழ் வேந்தர்களில் ஒருவரான பாண்டியர்களின் தலைநகராக விளங்கியது மதுரை மாநகர். பாண்டிய மன்னன் மதுரையை ஆண்ட சமயம் அம்மன்னன் மதுரையை விரிவுப்படுத்த எண்ணி இறைவனிடம் மதுரையின் எல்லையை வரையறுத்து தருமாறு வேண்டினான். இறைவன் அப்போது தன் கையணியாகி பாம்பிடம் எல்லையை வரையறுக்கும் படி ஆணையிட்டார். அதற்கிணங்க பாம்பும் தனது வாலை நீட்டி வலப்புறமாக தனது உடலை வளைத்தது. அந்த வாலைத் தனது வாயில் சேர்த்து மதுரையின் எல்லையை வகுத்துக் காட்டியது. அன்று முதல் மதுரைக்கு ஆலவாய் எனும் சிறப்பு பெயர் அமைந்துள்ளதாக திருவிளையாடற் புராணம் எடுத்துரைக்கிறது. ஆலவாய் என்பதன் சொல் விளக்கம் ஆலம் என்பதற்கு நஞ்சு என்று பொருள். நஞ்சுடைய பாம்பினைக் குறிப்பதே ஆலவாய். மேலும் மதுரையில் எழுந்தருளிய ஈசன் ஆலமர நிழலில் வீற்றிருந்ததால் ஆலவாய் என்னும் பெயர் உருவானதாகவும் ஒரு கதை உண்டு.
அடுத்ததாக மதுராபுரி எனும் பெயர் மதுரைக்கு வந்த கதையைப் பார்ப்போம். மதுரம் என்றால் இனிமை என்றும் பொருள். தனஞ்செயன் எனும் விவசாயி ஒரு முறை வனப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது கடம்ப மரம் ஒன்றின் கீழ் சுயம்பு லிங்கம் இருப்பதையும் கடவுளின் கடவுளான இந்திரன் அந்த சுயம்பு லிங்கத்தை வணங்கி கொண்டிருப்பதையும் பார்த்த அந்த விவசாயி அந்த செய்தியை உடனே குலசேகர பாண்டிய மன்னரிடம் தெரிவித்தார். பின் மன்னன் உடனே அந்த பகுதியை சுத்தம் செய்ய உத்தரவிட்டார். அந்த சுயம்பு லிங்கத்தை மையமாக வைத்து புதிய நகரம் உருவாக்கவும் உத்தரவிட்டார். அதே போல் நகரம் உருவாக்கப்பட்டது. அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று மன்னர் மற்றும் அனைவரும் சிந்தித்த வேளையில் சிவப்பெருமான் அங்கு தோன்றி தனது தலை முடியிலிருந்து சில தேன் துளிகளை நகரின் மீது தூவி அந்த புதிய நகருக்கு மதுராபுரி என்றும் பெயர் சூட்டப்பட்டதாகவும் ஒரு கதை உண்டு.
நகரமைப்பு
பண்டைய மதுரை நகரத்தின் புவியியல் மற்றும் வழிபாட்டு மையமாக விளங்கிய மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி மதுரை நகரமானது கட்டப்பட்டுள்ளது.நகரமானது பொது மையத்தைக் கொண்ட நான்கு நாற்கர வடிவமுடைய தெருக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது மதுரையை ஆண்ட நாயக்கர்களின் முதல் நாயக்கரான விசுவநாத நாயக்கரால் (கி. பி. 1159–64) சதுர மண்டல முறையில் கட்டப்பட்டதாகும்.
இந்த தெருக்கள் அவற்றில் திருவிழாக்கள் கொண்டாடப்படும் தமிழ் மாதங்களின் பெயர்களால் ஆடி, சித்திரை, ஆவணி - மூல, மாசி வீதிகள் என தற்போதும் அழைக்கப்படுகின்றன. கோயில் பிரகாரத்திலும் அதனைச் சுற்றி அமைந்துள்ள தெருக்களிலும் திருவிழாக்களானது கொண்டாடப்படுவதுடன், தேரோட்டமும் நடைபெறுகிறது. நகர மையமும், அதனைச் சூழ்ந்துள்ள தெருக்களும் தாமரை மலர் மற்றும் அதன் இதழ் போன்ற தோற்றம் கொண்டதாக பழைய இலக்கியங்கள் கூறுகின்றன. மதுரையின் கிழக்கு குடவரை கோவில் குன்னத்துார்(திருக்குன்றத்துார்) அமைந்துள்ளது. மாற வர்ம சுந்தரபாண்டியன் மற்றும் பலர் சிவலிங்க திருமேனியை மலையை குடைந்து உருவாக்கி உள்ளனர். இது கி.பி 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இது மதுரையிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கோயில் நகரமான மதுரையின் மத்தியில், அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலே, தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக் கோயிலாக உள்ளது. இத்தலத்தில், முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது.
சிதம்பரம், காசி, திருக்காளத்தி வரிசையில், முக்கியமான 4வது தலமாக திருவாலவாய் உள்ளது. இந்த நகரம் புராண காலத்தில் திருவாலவாய் என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த தலத்தின் பெயரைக் கேட்டதுமே பேரின்ப நிலை கிடைக்கும்.அதனால், சிவபெருமானுடைய முக்தி தலங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இத்தலத்தினை, 'சிவன் முக்திபுரம்' என்றும் அழைக்கின்றனர்.இத்தலம், முக்கியமான சிவத்தலமாக மட்டும் இல்லாமல், அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றுமாகும்.
தேவலோகத்தின் அரசனான இந்திரனால், இக்கோயில் கட்டப்பட்டது என்பது நம்பிக்கை. இராமர், இலட்சுமணன், வருணன், இந்திரன், தேவர்கள் மற்றும் முனிவர்கள் போன்றவர்களால் இச்சிவாலயம் வழிபடப்பட்டுள்ளது. இத்தலத்தில் தரப்படுகின்ற பிரசாதமான தாழம்பூ குங்குமம், பிரசித்தி பெற்றதாகும்.
புதுமண்டபம்
புதுமண்டபம் அல்லது வசந்த மண்டபம், மதுரை மாநகரில், மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ளது. மதுரை மன்னர் திருமலை நாயக்கர் 1635இல் ஆண்டு தோறும் கோடைக் காலத்தில் வசந்த விழா கொண்டாடுவதற்காக புதுமண்டபத்தைக் கட்டினார். இம்மண்டபம் முற்றிலும் கல்லினால் கட்டப்பட்டுள்ளது. திருமலை மன்னர் காலக் சிற்பிகளின் உன்னத உளி வேலைப்பாட்டினால் இம்மண்டபம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சிற்ப, கட்டடக் கலைத்திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இம்மண்டபம் விளங்குகிறது.
திருமலை நாயக்கர் அரண்மனை
திருமலை நாயக்கர் அரண்மனை (Thirumalai Nayak Palace) அல்லது திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை, மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது.
மதுரையில் அமைந்துள்ள இக் கட்டிடம், புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து, சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில், தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் இந்தோ சரசனிக் பாணி கட்டிட கலைநயத்தில் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக்கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே, தற்போது எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகின்றது. பிரித்தானிய இந்தியாவின் சென்னை ஆளுநர், பிரான்சிஸ் நேப்பியர் கி.பி.1872-இல் இவ்வரண்மனையைப் புதுப்பித்தார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரிக்கும் மூன்று அரண்மனைகளில், இந்த அரண்மனையும் ஒன்றாகும். இவ்வரண்மனையின் நீட்சியாக, பத்துத் தூண் பகுதி இருந்தது.
காந்தி அருங்காட்சியகம்
1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்பு இந்திய மக்களின் ஆதரவிலும் நிதியுதவியினாலும் காந்தியின் பெயரால் நிறுவப்பட்ட அறக்கட்டளையினால் எழுப்பப்பட்டது. இந்த அருங்காட்சியகம் ஏப்ரல் 15 அன்று 1959 ஆம் வருடம் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவில்லம் ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைதிக்கான அருங்காட்சியகங்களில் ஒன்றாக இருக்கின்றது. இராணி மங்கம்மாள் அரண்மனை இந்த அருங்காட்சியக அமைவிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த நினைவில்லம் நிறுவப்பட்டது.
அடுத்ததாக மகாத்மாவின் வாழ்க்கையை விளக்கி கூறும் விதமாக அமைந்த ஒளிஉணர் விளக்க குறிப்பு இருக்கின்றது. இதில் அரிய நிழற்படங்களும், ஓவியங்களும், சிற்பங்களும், குறிப்புகளும், மகாத்மாவின் உரையில் பெற்ற அர்த்தம் பொதிந்த வாக்கியங்களும், மேலும் சில நிழற்பட நகல்களும், மகாத்மா அவர்கள் கைப்பட எழுதிய எழுத்துப்பிரதிகளும் உள்ளன, மேலும் 124 காந்தியின் குழந்தை பருவ மிக அரிய நிழற்பட தொகுப்புகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம்
சங்கத் தமிழ் காட்சிக் கூடத்தில் புறநானூறு, அகநானூறு, தொல்காப்பியம், திருக்குறள் பாடல்கள்; ஒளவையார், அங்கவை சங்கவை, திருவள்ளுவர், தொல்காப்பியர், சீத்தலை சாத்தனார், இளங்கோவடிகள், கம்பர், முதலிய கவிஞர்கள் மற்றும் சங்க கால கடையேழு வள்ளல்களான அவ்வைக்கு நெல்லிக் கனி அளித்த அதியமான், முல்லைக் கொடிக்கு தேர் தந்த பாரி, நாட்டோர் உவப்ப நடைப் பரிகாரம் நல்கிய நள்ளி, யாழ் மீட்டும் பாணர்களுக்கு நாட்டையே வழங்கிய ஓரி, ஈர நன்மொழிகள் வழங்கிய காரி, நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்கு (குற்றால நாதருக்கு) அணிவித்த ஆய் மற்றும் மயிலுக்கு போர்வை நல்கிய பேகன் போன்றவர்களின் உருவங்களைச் சிற்பங்களாகவும், ஓவியங்களாகவும், காணொலிக் காட்சிகளாகவும் அசைவுப் படங்களாகவும் காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
காட்சி கூடத்தின் முன் பக்க சுவரில், பாண்டிய அரசவையில் நக்கீரர் முதலான புலவர்கள் முன்னிலையில், தருமிக்கு பாண்டிய மன்னர் பொற்கிழி வழங்கும் காட்சியை புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டப்பட்டுள்ளது.
காட்சிக் கூடத்தின் நுழைவு வாயிலில் கலித்தொகை பாட்டினை விளக்கும் வகையில் ஏறுதழுவல் ஓவியம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சங்கத் தமிழ் காட்சிக் கூட வளாகத்தின் வெளிப்புறச் சுற்றுச் சுவர்களில் புறநானூறு, நெடுநல்வாடை, நற்றிணை, கலித்தொகை, சிறுபாணாற்றுப்படை, மலைபடுகடாம் போன்ற சங்க காலப் பாடல்களை விளக்கும் வகையில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது.